போச்சம்பள்ளி அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போச்சம்பள்ளியை அடுத்த புலியூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் தருமபுரி-ஊத்தங்கரை சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க், தனியார் பள்ளி, 500 அடி தூரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் உள்ளது.
இந்த பெட்ரோல் பங்க் ஒட்டியவாறு தனியார் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க வேலைபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் இப்பகுதி மக்கள் தென்னை மரங்கள் மற்றும் கீற்றுக்கொட்டகை அதிகம் உள்ளதால் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன.
செல்லிடப்பேசி கோபுரம் அமைத்தால் அதிக கதிர்வீச்சின் காரணமாக பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கிராம மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவல் அறிந்த பாரூர் போலீஸார், வருவாய்த் துறை அங்கு சென்று கிராம மக்களிடையே பேச்சு நடத்தி செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க தற்காலிகமாக வேலைகளை நிறுத்தி வைத்தனர்.