கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகுகளின் ஆண்டு பராமரிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 60 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டது.
இந்த அணையில் பிரதான மதகுகளில் ஒன்றான முதலாம் எண் கொண்ட மதகு, கடந்த 2017ஆம் ஆண்டு, நவம்பர் 29ஆம் தேதி சேதமடைந்தது. இதையடுத்து, சேதமடைந்த மதகு அப்புறப்படுத்தப்பட்டு, ரூ.3 கோடி மதிப்பில் புதிய மதகு அமைக்கப்பட்டது. இதையடுத்து, அணையின் 52 அடி உயரம், மொத்த கொள்ளவில் 42 அடி உயரம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
புதிய மதகு அமைக்கப்பட்டுள்ள நிலையில், பழைய பிரதான மதகுகளையும் மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பிரதான மதகுகளை மாற்றுவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், அணையின் பிரதான மதகுகளின் ஆண்டு பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதில், மதகுகளை மேலே உயர்த்தும் மோட்டாரை சீரமைத்தல், துருப்பிடித்துள்ள பகுதிகளைக் கண்டறிந்து சரிசெய்தல், வர்ணம் அடித்தல், மதகுகளின் பக்கவாட்டில் உள்ள ரப்பர்களை மாற்றுதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகள் இரண்டு நாள்களில் நிறைவு பெறும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.