ஒசூர் மற்றும் சூளகிரியில் நடைபெற்ற சாலை விபத்துகளில் மூவர் உயிரிழந்தனர்.
ஒசூர் ராம்நகரைச் சேர்ந்த இதாயத் (27), அசேன் (28), சமீர் (27) ஆகியோர், கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு அருகே திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இதாயத், அசேன், சமீர் ஆகியோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் இதாயத் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவர் பலி... சூளகிரி அடுத்த கோபசந்திரத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (47). இவர் திங்கள்கிழமை கோபசந்திரம் அருகே கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் அர்ஜூனன் மீது மோதியது. இவர் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நல்லகானகொத்தப்பள்ளியைச் சேர்ந்த ஜெகதீஷ் (23) படுகாயம் அடைந்து ஒசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார்.