ஒசூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
ஒசூர் 2-ஆவது சிப்காட் பேரண்டப்பள்ளி அருகே தனியார் லாரி உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலை அருகே தனியார் வங்கியின் ஏடிஎம் இயங்கி வருகிறது.
இந்த வங்கி ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் தொழிலாளர்கள் பணத்தை எடுத்து வந்தனர். இந்த ஏடிஎம் அறைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், சிசிடிவி கேமராவை உடைத்து விட்டு பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது இதைப் பார்த்த சிலர், அட்கோ காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற அட்கோ போலீஸார் அங்கிருந்த நபரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் தேன்கனிக்கோட்டை வட்டம் கெத்தல்லி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சீனிவாசன்(22) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து அட்கோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.