காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது உபரிநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்நீரை சேமிக்க ஒகேனக்கல் அருகே உள்ள ராசிமணலில் அணைக்கட்டுவதே நிரந்தரத் தீர்வாகும் என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீரை ஒகேனக்கல் அருகே விவசாய சங்கத்தினரும், பி.ஆர். பாண்டியனும் புதன்கிழமை பார்வையிட்டனர். பின்னர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகம், கேரளம் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால், கர்நாடக அணைகள் நிரம்பின. இதனால், காவிரி ஆற்றில் 3 லட்சம் கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும், உபரி நீரானது வீணாகக் கடலில் கலக்கிறது.
இதற்கு ஒகேனக்கல் அருகே ராசிமணல் பகுதியில் அணை கட்டுவதே நிரந்தரத் தீர்வாகும். அவ்வாறு அணை கட்டுவதன் மூலம் 100 டி.எம்.சி வரை தண்ணீரைத் தேக்கலாம். இதன்மூலம் காவிரி கரையோர மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும். எனவே ஒகேனக்கல் ராசிமணல் பகுதியில் அணைகட்ட வேண்டும் என பிரதமர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். கர்நாடக அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய மாதாந்திர நீரை வழங்காமல், அணையின் பாதுகாப்புக் கருதி திறக்கப்பட்ட நீரைக் கணக்கீடு செய்கிறது. தமிழக அரசு உபரிநீரைத் தேக்க அணை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். அவருடன் விவசாய சங்கத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.