ஒசூரை அடுத்த அய்யூர் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்ததையடுத்து, அங்குள்ள சுற்றுலா மாளிகையை அப் பகுதி மக்கள் சேதப்படுத்தினர்.
அய்யூரில் வனத் துறைக்குச் சொந்தமான சுற்றுலா மாளிகை உள்ளது. இதில் கனடா நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை தங்கியிருந்தனர். இந்த நிலையில், அய்யூரைச் சேர்ந்த அப்பய்யா (60), நாகராஜ் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை இரவு தோட்டத்துக்கு காவலுக்குச் சென்றனர். அப்போது, யானை தாக்கியதில் நிகழ்விடத்திலே அப்பய்யா உயிரிழந்தார். நாகராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அப் பகுதி மக்கள் சுற்றுலா மாளிகை, வாகனங்களை சேதப்படுத்தினர். அப்போது, அதில் தங்கியிருந்த கனடா நாட்டு சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.