ஒசூர் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் டி.சி.எஸ். நிறுவனம் தொழில் தொடங்க முன்வந்துள்ளதாக ஒசூர் வருவாய்க் கோட்டாட்சியர் குமரேசன் தெரிவித்தார்.
ஒசூர் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம்(ஹோஸ்டியா), அலுபி டை காஸ்டிங் நிறுவனம் இணைந்து தொழில் முனைவோர் தினத்தை புதன்கிழமை கொண்டாடின. ஒசூர் ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வருவாய்க் கோட்டாட்சியர் குமரேசன் தொழில் முனைவோர்களுக்கு பரிசுகளை வழங்கிய பேசியது:
ஒசூர் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் டி.சி.எஸ் நிறுவனம் தொழில் தொடங்க முன் வந்துள்ளது. அதில் 7 ஆயிரம் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சூளகிரி மற்றும் கெலமங்கலம் அருகே சிட்கோ தொழில்பேட்டைகள் தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இந்த விழாவில் புதிய தலைமுறை தொழில்முனைவோர், சிறந்த தொழில்நுட்ப தொழில் முனைவோர், பழமையை தொடர்ந்து இரண்டாம் தலைமுறை தொழில் முனைவோர், சிறந்த பங்குதாரர்கள் கொண்ட தொழில்முனைவோர் என 11 பிரிவுகளில் தொழில் முனைவோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் ஹோஸ்டியா சங்கத்தின் செயலாளர் வடிவேலு, பொருளாளர் ஸ்ரீதர், முன்னாள் தலைவர்கள் முரளிபாபு, ஞானசேகரன், நம்பி, அலுபி டை காஸ்டிங் நிறுவனத்தினர் ராகவன், பிரபுராம், சாய்ராம், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.