தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 35 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 16-ஆம் தேதி, கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 29.40 அடியாக இருந்தது. அதேபோல அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 108 கன அடியாக இருந்தது. இந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 5 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் ஆக.18-ஆம் தேதி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 281 கன அடியாகவும், 19-ஆம் தேதி 976 கன அடியாகவும், 20-ஆம் தேதி 675 கன அடியாகவும், 21-ஆம் தேதி 410 கன அடியாக உயர்ந்தது. இதேபோல ஆக.17-ஆம் தேதி அணையிலிருந்து விநாடிக்கு 108 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. 20, 21 ஆகிய தேதிகளில் விநாடிக்கு 12 கன அடி நீர் மட்டுமே அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
நீர்வரத்து அதிகரித்து வருவதாலும், நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 17-ஆம் தேதி 29.40 அடியாகவும், 18-இல் 30 அடியாகவும், 19-ஆம் தேதி 32.50 அடியாகவும், 20-ஆம் தேதி 34.10 அடியாகவும், 21-ஆம் தேதி 35 அடியாகவும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கெலவரப்பள்ளி அணையிலிருந்து ஆக.21-ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 762 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரியில் 16 மி.மீட்டர் மழையும், ஒசூரில் 5.3 மி.மீட்டர் மழையும் பதிவாகின.