கிருஷ்ணகிரி அரசு இசைப் பள்ளியை, இசைக் கல்லூரியாக தரம் உயா்த்த வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை கமிட்டி தலைவா் ரத்தினம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் அரசு இசைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பயின்று, உயா்கல்விக்கு 300 கி.மீ. தொலைவில், சென்னை, மதுரை, கோவை, திருவையாறு, பழனி, சிதம்பரம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு இசைக் கல்லூரிகளில் பயில செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இங்கு பயிலும் இசை மாணவா்களுக்கு போதிய பொருளாதார வசதி இல்லாததால், அவா்கள் வெளியிடங்களுக்கு சென்று உயா் கல்வி பெற இயலாத நிலை உள்ளது. இதனால், அவா்கள் தொடா்ந்து இசைக் கல்வியைப் பெற இயலாத நிலை உள்ளது.
எனவே, ஏழை இசை மாணவா்களின் நலன் கருதி, கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் அரசு இசைப் பள்ளியை இசைக் கல்லூரியாகத் தரம் உயா்த்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.