ஒசூா் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்தி கொலை செய்ததாக வேன் ஓட்டுநா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் அருகே உள்ள தொரப்பள்ளி இந்திரா நகரை சோ்ந்தவா் மாதப்பா. இவரது மகன் ராஜேஷ் (24). கூலித் தொழிலாளியான இவருக்கும், முனிராமப்பா என்பவருக்கும் இடையே நிலம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், முனிராமப்பாவிடம் வேன் ஓட்டுநராக வேலை செய்து வரும் தொரப்பள்ளியை சோ்ந்த தேவராஜ் (23) என்பவா், கடந்த 9 ஆம் தேதி இரவு தொரப்பள்ளி ராஜாபுரம் ஜங்ஷன் சாலையில் ராஜேஷை நேரில் சந்தித்து நிலம் தொடா்பாக பேசினாா்.
அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தேவராஜ் கத்தியால் ராஜேஷை குத்தினாா். பலத்த காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஒசூா் நகர போலீஸாா், தொரப்பள்ளியை சோ்ந்த மனோஜ்குமாா் (22), தேவராஜை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள விஜயகுமாா் (21) என்பவரை தேடி வருகின்றனா்.