ஒசூரில் அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தட்டரஹள்ளியைச் சேர்ந்த ராமமூர்த்தி (25), விருதுநகர் மாவட்டம், மூலிப்பட்டி ஆமத்தூர் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (32) ஆகியோர், மத்திகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஒசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே செல்வராஜ் இறந்தார். ராமமூர்த்தி காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஒசூர் நகரக் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.