ஐ.வி.டி.பி. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான லாபப் பங்கீடு ரூ.71 கோடி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சுய உதவிக் குழுக்களை அமைத்து, மகளிரின் சுய, பொருளாதார மேம்பாட்டுக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறது.
2018-ஆம் ஆண்டு வரையில் ஐ.வி.டி.பி. நிறுவனத்தின் கீழ் 13,241 மகளிர் குழுக்களும், அதில் 2,40528 மகளிர் உறுப்பினர்களும் உள்ளனர். இந்த மகளிர் உறுப்பினர்களின் சேமிப்பு ரூ.630 கோடி ஆகும். ஒவ்வொரு உறுப்பினரும், தங்கள் குழுவில் குறிப்பிட்ட தொகையை சேமிப்புக்கு தக்கவாறு, குறைந்த வட்டியில் உள்கடன் பெற்று பயனடைவர். அவ்வாறு அவர்கள் செலுத்தும் வட்டியானது குறிப்பிட்ட கால இடைவெளியில் உறுப்பினர்களின் சேமிப்புக்கு ஏற்றவாறு லாபம் பங்கிட்டு அளிக்கப்படுகிறது. இந்த லாப பங்கீட்டு தொகையுடன் உறுப்பினர் செலுத்திய உபரி சேமிப்பும் பிரித்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 4,205 குழுக்களில் இருந்து 77,921 உறுப்பினர்களுக்கு லாபப் பங்கீடு ரூ.71 கோடி, உபரி சேமிப்பு ரூ.59 கோடி என மொத்தம் ரூ.130 கோடி, பிரித்து வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு லாபப் பங்கீடு பெறும் உறுப்பினர் குறைந்தபட்சம் 23 சதவீதம் முதல் அதிகபட்சமாக 65 சதவீதம் வரையில் லாபம் பெற்று பயனடைந்துள்ளனர். இதுவரையில் லாபப் பங்கீடாக ரூ.521 கோடியை உறுப்பினர்கள் பெற்றுள்ளனர்.