மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்தால், தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்களை கர்நாடகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
மேக்கேதாட்டு திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, ஒசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வரும் 27-ஆம் தேதிக்குள் கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளாவிட்டால் கன்னட அமைப்புகள் சார்பில் அணை கட்டும் பகுதிக்கு கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்லும் பணியைத் தொடங்குவோம். அணை கட்டக் கூடாது எனக் கூறுவதற்கு தமிழகத்துக்கு தார்மிக உரிமையில்லை. இந்தத் திட்டம் மூலம் தமிழகத்துக்குத்தான் பயன்.
இந்த நிலையில், அணையைக் கட்டுவதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தால் தமிழகப் பதிவெண் கொண்ட வாகனத்தை கர்நாடகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம். இதேபோன்று தமிழ் படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றார்.