பென்னாகரம் பி. அக்ரஹாரம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆவேசமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோணங்கி அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பி.அக்ராஹரம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப் பகுதி மக்களின் நலன் கருதி நல்லம்பள்ளி ஒன்றியத்தின் சார்பில் பி. அக்ரஹாரம் பகுதியில் 3 சிறிய நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்த மூன்று சிறிய நீர்த்தேக்கத் தொட்டியானது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பழுதடைந்ததால் அப்பகுதி மக்கள் அன்றாட தேவைக்கான தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பென்னாகரம்-தருமபுரி செல்லும் சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதன்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், பென்னாகரம் காவல் ஆய்வாளர் பெரியார் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.