குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, மத்தூர் காவல் நிலையத்தை பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
மத்தூரை அடுத்த அருந்ததியர் நகரில் 2 மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம். மாவட்ட ஆட்சியரகம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து மனு அளிக்க காலி குடங்களுடன் அப் பகுதி மக்கள் சென்றனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால், அங்கிருந்து மத்தூர் காவல் நிலையத்துக்குச் சென்று தங்களது கோரிக்கை குறித்து விளக்கினர்.
வட்டார வளர்ச்சி அலுவலகம் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாததால், மறியலில் ஈடுபடப் போவதாக காவல் நிலையத்தில் அனுமதி கோரினர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கரன் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தெருவிளக்குகள், குடிநீர் வசதி செய்துதர மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தெரியப்படுத்தி வேண்டிய ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை கைவிடப்பட்டது.