கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன் சூளகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் மேகலப்பா. இவரது மூத்த மகன் மாதையன்(35). கட்டடத் தொழிலாளி. மனைவி வரலட்சுமியுடன் வசித்து வந்தார். இவரது தம்பி நாகராஜ் (28). திருமணமாகாத இவர் தாய் பச்சையம்மாளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த நாகராஜை அவரது அண்ணன் மாதையன் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு சூளகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்விடத்துக்கு சென்ற சூளகிரி காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸார், நாகராஜியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாதையனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தனது மனைவியுடன் தகாராறில் ஈடுபட்டதாலும், பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாலும் நாகராஜை கொலை செய்ததாகக் கூறியுள்ளார். இது குறித்து சூளகிரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.