அஞ்செட்டி அருகே மரத்தடியில் வீசப்பட்டிருந்த 27 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், மலைக் கிராமங்களில் உரிமம் பெறாமல் பலரும் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். வன விலங்குகளை வேட்டையாடவும், வன விலங்குகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும் துப்பாக்கிகள் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவின் பேரில், மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார், அஞ்செட்டி போலீஸார் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்கு ரோந்து சென்று நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் அஞ்செட்டி அருகே ஒகேனக்கல் செல்லும் சாலையில் உள்ள பூமரத்து குழி என்னும் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள ஆலமரத்தடியில் உரிமம் இல்லாமல் பயன்படுத்தி வந்த 27 நாட்டுத் துப்பாக்கிகள் வீசப்பட்டிருந்தன. தகவலறிந்து அங்கு சென்ற அஞ்செட்டி போலீஸார் நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கடந்த 21-ஆம் தேதி தேன்கனிக்கோட்டை அருகே ஏணிபெண்டா கிராமத்தில் 3 நாட்டுத் துப்பாக்கிகளும், வீரிசெட்டி ஏரி கிராமத்தில் 7 துப்பாக்கிகளும், ஏணிமுச்சந்திரம் கிராமத்தில் 9 நாட்டுத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.