கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க் கூட்டம், ஆட்சியர் சு.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி, பொதுமக்களிடமிருந்து 317 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்களை கேட்டுக் கொண்ட ஆட்சியர் சு.பிரபாகர், நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி, சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில் பணியிட விபத்தில் மரணமடைந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம், விபத்து மரண நிதியாக ரூ.1.02 லட்சம், இயற்கை மரண நிதியாக 13 குடும்பத்தினருக்கு ரூ.2.69 லட்சம் என மொத்தம் 27 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.18.71 லட்சத்தை காசோலையாக வழங்கினார்.
மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறையின் சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு இறப்பு நிவாரண நிதியாக 3 பேருக்கு தலா ரூ.17 ஆயிரம் என மொத்தம் ரூ.51 ஆயிரம், தனி நபர் தொழில் தொடங்க 100 சதவீத மானியமாக 82 பேருக்கு தலா ரூ.7,500 வீதம் மொத்தம் ரூ.6.15 லட்சம் என மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.6.66 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.