போச்சம்பள்ளி அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், புதர்மண்டிக் கிடக்கும் பாசனக் கால்வாயை கூட்டாக சேர்ந்து கடந்த 22 நாள்களாக சுத்தம் செய்து வருகின்றனர்.
போச்சம்பள்ளி வட்டம், சுண்டகாப்பட்டி, தட்ரஅள்ளி, ஆவத்துவாடி, அகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். இந்தப் பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களின் விவசாயத் தொழிலுக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, அத்திக்குட்டை ஏரியிலிருந்து நாகல் ஏரிக்கு பாசனக் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த பாசனக் கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால், மண் சரிந்தும், புதர்மண்டியும் காணப்பட்டது. இதனால், விளைநிலங்களுக்கு போதிய நீர் கிடைக்காமல் இருந்தது.
இந்த பாசனக் கால்வாய்யை சீர்படுத்த வேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித் துறையினரை வலியுறுத்தினர். ஆனால், இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து, ஆவத்துவாடி, சுண்டாக்காப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து, கால்வாயை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 21 நாள்களாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தனர். பருவ மழை பெய்யத் தொடங்குவதற்கு முன்பே இந்தப் பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாவும், இந்தப் பணியானது இன்னும் 10 நாள்களில் நிறைவு பெறும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
பொதுப் பணித் துறையினருக்காக காத்திருக்காமல், விவசாயிகளே ஒருங்கிணைந்து பாசனக் கால்வாயை சமப்படுத்தி, புதர்களை அகற்றி, சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.