வீட்டு வாடகையை ஒழுங்குப்படுத்த அதிகார அலுவலர்கள் நியமனம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டு வாடகையை ஒழுங்குப்படுத்த வாடகை அதிகார அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு ஆணையின்படி வாடகைதாரர்கள், நில உடைமைதாரர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் ஒழுங்குப்படுத்துதல் சட்டம் - 2017 ஆனது பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சட்டப்பிரிவு 30-இன் கீழ், கோட்ட அளவில் வாடகை அதிகார அலுவலரை நியமித்து ஆணையிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பர்கூர் ஆகிய வட்டங்களுக்கு கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியரும், ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களுக்கு ஒசூர் வருவாய்க் கோட்டாட்சியரும் வாடகை அதிகார அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், வாடகைப் பதிவு தொடர்பாக வாடகை அதிகார அலுவலர்களை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு www.tenancy.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மனுக்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.