வேப்பனஅள்ளி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையைக் கண்டித்து மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் தங்களது எதிர்ப்பை, புதன்கிழமை வெளிப்படுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே உள்ளது நல்லூர் கிராமம். அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 163 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒரு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.
இந் நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இந்தக் கிராமத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால், ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களே இந்த வகுப்புகளுக்கும் சென்று வந்தனர். இதுகுறித்து, பெற்றோர்கள், கல்வித் துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து, பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாளிக்கும் வகையில், காவேரிப்பட்டணத்திலிருந்து இடைநிலை ஆசிரியரை, தற்காலிகமாக கல்வித் துறையினர் நியமித்துள்ளனர்.