மத்தூர் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், கத்தியால் குத்தியதில் காயமடைந்த இருவர் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள குட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கருக்கும் (45), அதே பகுதியைச் சேர்ந்த செல்லியம்மாளுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், அங்குள்ள பொது குடிநீர் குழாயில் சங்கர் வியாழக்கிழமை தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த செல்லியாம்மாளுக்கும் சங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த செல்லியம்மாள், தனது உறவினர்கள் பகவதி (18), பழனி (32), மகேந்திரன் (38) ஆகியோருடன் சேர்ந்து, சங்கர் மற்றும் அவருடன் இருந்த முருகேசன் ஆகிய இருவரையும் கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தினார்களாம்.
இதில் காயமடைந்த இருவரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகினறனர்.