பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2019-2020-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 15-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்பிரமணி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பர்கூர் கூட்டுறவு தொழிற்
பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2019-2020-ஆம் ஆண்டிற்கான நிர்வாக ஒதுக்கீட்டிற்கு நேரடி மாணவர் சேர்க்கை முதல்கட்டமாக ஜூலை 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மின்பணியாளர், கணினி இயக்குநர் மற்றும் திட்ட உதவியாளர், கைவினைஞர், உணவு தயாரித்தல்(பொது) ஆகிய தொழிற்பரிவுகளுக்கு மதிப்பெண்கள் தரவரிசை பட்டியல் மற்றும் அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில் நிர்வாக இடங்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கு இந்தச் செய்தி கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடித்தவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. ஆண்கள் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விடுதி வசதியும் உள்ளது. காலதாமதமாக வருபவர்களுக்கு குறிப்பிட்ட தொழிற்பிரிவுக்கான சேர்க்கைக்கு இடமில்லாமல் போனால், அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது.
10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள்-2, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல்கள் - 2, ஆகியவற்றுடன் நேரில் வந்து சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொண்டு, அரசு விதிகளின்படி தேர்வு செய்யப்பட்டால் ஆண்டுக்கான மொத்த கல்வி கட்டணத்தை செலுத்தி, சேர்க்கை செய்து கொள்ளலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.