கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதி மன்றம் மூலம் 2,434 வழக்குகளில் ரூ.13.58 கோடிக்கு தீர்வு காணப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மன்றம் நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்ற வளாகங்களும் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான மீனா சதீஷ் தலைமை வகித்தார். சட்டப்பணிகள் ஆணையக்குழுச் செயலாளர் அறிவொளி, மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்பு செல்வி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கலாவதி மற்றும் நீதிபதிகள், வழக்குகளை நடத்துபவர்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்வு கொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழுவதும் மொத்தம் 13 அமர்வுகளில் இந்த மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. இதில் மொத்தம் 6,091 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 2,434 வழக்குகளில் ரூ.13.58 கோடிக்கு தீர்வு காணப்பட்டன.
ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 382 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவர் ஊத்தங்கரை சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.கே.திலீப் தலைமை வகித்தார். உரிமையியல் நீதிபதி சி .ராஜசேகர், குற்றவியல் நடுவர் பி .திருஞானசம்பந்தம், ஓய்வு பெற்ற நீதிபதி எ.ஆர். அஜிஷ் ஆகியோர் கொண்ட அமர்வு பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு ஏற்படுத்தியது.
485 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 382 வழக்குகளில் 72 லட்சத்து 39 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது. வழக்குரைஞர்கள், நீதிமன்ற அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.