கிருஷ்ணகிரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக எம்.பி. செல்லகுமார் தெரிவித்தார்.
ஊத்தங்கரை சிப்காட் பகுதியில் தனியார் நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கிருஷ்ணகிரி - திண்டிவனம் வரை உள்ள சாலைப் பணிகள் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப் பணிகளை விரைந்து முடிக்குமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். மேலும், மக்களவையிலும் பேசியுள்ளேன். ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கவும், ஒசூர் பகுதியில் வாசனை திரவ தொழிற்சாலை அமைக்கவும் மக்களவையில் குரல் எழுப்பினேன்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுங்கசாவடியை மாற்றியமைக்க ஆட்சியரிடம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள், கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். உடன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணி, முன்னாள் ஒன்றியக் குழு தலைவர்,வடக்கு வட்டாரத் தலைவர் ஜெ.எஸ்.ஆறுமுகம், தருமபுரி மாவட்ட தலைவர் கோ.வி.சிற்றரசு, மாவட்ட பொதுச் செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.