கிராம நிர்வாக அலுவலர்கள் மீது புகார் தெரிவிக்கும் வகையில் குறைதீர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் பொறுப்பு கிராமங்களில் தங்கி, பணிபுரியாதது தொடர்பான புகார் மனுக்களைப் பெறுவதற்காக, ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தலைவராகவும், அலுவலக மேலாளர் (பொது), தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) இருவரும் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் பொறுப்பு கிராமங்களில் தங்கிப் பணிபுரியாதது தொடர்பாக ஏதேனும் புகார் இருப்பின், தலைவர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கிராம நிர்வாகக் குறை தீர்க்கும் பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் மனுக்களை அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.