ஒசூர் அருகே இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஒசூர் அருகே உள்ள துப்புகானப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பா மனைவி காவேரியம்மாள்(85). இவர் ஞாயிற்றுக்கிழமை உத்தனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தனியார் கல்குவாரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, ஈரோடு மாவட்டம், தாளவாடி திப்பு சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் சித்திக்(19). இவர் அச்செட்டிப்பள்ளி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இவரும் ஒசூர் ஜாபர் தெருவை சேர்ந்த இப்ராகிம் (21) என்பவரும் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
சூளகிரி அடுத்த மேலுமலை பகுதியில் லாரி மீது இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சித்திக் மற்றும் இப்ராகிம் ஆகியோரை மீட்ட பொதுமக்கள் ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.