கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 1,66,777 விலையில்லா பாடப் புத்தகங்கள் திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடைவிடுமுறைக்கு பின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி ரோஜா பூக்கள், இனிப்புகளை வழங்கி மாணவிகளை வரவேற்றார். இதையடுத்து, பள்ளியில் ஆசிரியர்களின் பயோமெட்ரிக் வருகைப் பதிவு இயந்திரத்தை அவர் இயக்கி வைத்து, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரிகேஜி ஆங்கில வகுப்புக்கு 13 புத்தகங்கள், எல்கேஜிக்கு 66 புத்தகங்கள், யூகேஜிக்கு 76 புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும், ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 6,271, இரண்டாம் வகுப்புகளுக்கு 12,065, 3-ஆம் வகுப்புகளுக்கு 15,001, 4-ஆம் வகுப்புகளுக்கு 14, 877, 5 - ஆம் வகுப்புகளுக்கு 15,355, 6-ஆம் வகுப்புகளுக்கு 7,349, 7-ஆம் வகுப்புகளுக்கு 18,648, 8-ஆம் வகுப்புகளுக்கு 17,421, 9-ஆம் வகுப்புகளுக்கு 14,921, 10-ஆம் வகுப்புகளுக்கு 18,031, 11-ஆம் வகுப்புகளுக்கு 12,604, 12-ஆம் வகுப்புகளுக்கு 12,110 புத்தகங்கள் என மொத்தம் 1,66,777 விலையில்லா புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
அப்போது, பள்ளியின் தலைமையாசிரியர் மகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவியர், பெற்றோர் -ஆசிரியர் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.