சிறார் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாகரசம்பட்டி பெரியார் ராமசாமி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் தனசேகரன் வரவேற்றார். ஆசிரியர்கள் அருண்குமார், நெடுஞ்செழியன், மருதாசலம், அறிவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் பேசுகையில், கொடிய வறுமை, ஊட்டச்சத்து குறைவு, கல்வியறிவு பெற முடியாத நிலை, உடல்நலனை பாதிக்கக் கூடிய ஆபத்தான சூழல், காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை போன்றவை சிறார்களின் உடல் நலனைப் பெரிதும் பாதிப்பதால் ஆஸ்துமா, காசநோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதலுக்குள்ளாகின்றனர். மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினை பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குழந்தைகளை மிகவும் கடுமையாகப் பாதிக்கின்றனர் என்றார். தொடர்ந்து மாணவர்கள் சிறார் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.