மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்வை, ஸ்மார்ட் டிவி மூலம், அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை பார்த்தனர்.
பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டம், திங்கள்கிழமை தொடங்கியது. இதில், தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பதவியேற்றனர். இதையடுத்து, 2 - ஆம் நாள் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்றனர்.
இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சவுளூர் அரசு நடுநிலைப் பள்ளியில் மீத்திறன் காட்சிப் பெட்டி (ஸ்மார்ட் டிவி) மூலம், தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்வை அந்த பள்ளியில் பயிலும் 6, 7, 8 - ஆவது வகுப்புகளைச் சேர்ந்த 58 மாணவ, மாணவியர் பார்த்தனர்.
இந்த நிகழ்வை பள்ளித் தலைமையாசிரியர் சா.வசந்தி, தொடங்கி வைத்தார். ஆசிரியர் சுகவன முருகன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். இதைத் தொடர்ந்து, மாலை இறைவணக்கம் கூட்டத்தில், மழை வேண்டி, கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.