பாரூர் ஏரியில் தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல் போக சாகுபடிக்கு  தண்ணீர் திறப்பது குறித்து  ஆலோசனைக் கூட்டம் பாரூரில்

பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல் போக சாகுபடிக்கு  தண்ணீர் திறப்பது குறித்து  ஆலோசனைக் கூட்டம் பாரூரில் உள்ள பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போச்சம்பள்ளி  அடுத்துள்ள  பாரூர்  பெரிய ஏரியில் இருந்து மேற்கு பிரதான வாய்க்கால் தலை மதகின் நீர்மட்டம் 10 அடியாக இருக்கும்பட்சத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி முதல்  பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த  ஆண்டு தண்ணீர் குறைந்த அளவு இருந்த காரணத்தால்  விவசாயிகளுக்கு கைகொடுக்கும் தென்மேற்குப் பருவமழை பொய்த்தது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு  தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது. எனவே, இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்க வேண்டுமென பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி பாரூரில் உள்ள பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்தில்,  பாரூரில் ஏரியில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு அணை உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமை வகித்தார். இதில், பாரூர் ஏரியின் நீர்மட்டம் 11.40 அடியாக உள்ளது. இதனைக் கணக்கில் கொண்டு முதல் போக பாசனத்துக்காக வருகிற 1-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை 135 நாள்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிட கருத்துரு தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன், அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பழமையான பாரூர் ஏரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட பின்பு தான் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். கால்வாய் கரைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். கெலவரப்பள்ளி அணைக்கு நீர் மேலாண்மைச் சட்டம் இயற்றி, அதன்படி பாசனம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில் பாரூர் ஏரி நீரினைப்பயன்படுத்தும் விவசாயிகள், வேளாண்மைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் பாரூர் உதவி பொறியாளர் முருகேசன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com