ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
உடற்கல்வி ஆசிரியர் தமயந்திக்கு, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் சங்கம் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வழங்கினார். மேலும், இப்பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஓவிய ஆசிரியர் சுரேஷுக்கு மரபு சிற்ப ஓவியர் விருதை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அண்மையில் வழங்கி, ரூ.15,000-க்கான காசோலையை வழங்கினார். விருதுகள் பெற்ற இரண்டு ஆசிரியர்களுக்கும் ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் பரிமளம் முன்னிலை வகித்தார். சாதனை படைத்த ஆசிரியர்கள் இருவரையும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.