கிருஷ்ணகிரியில் உலக குருதிக் கொடையாளர் தினத்தையொட்டி, விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனத்தால் ஜூன் 14-ஆம் தேதி உலக குருதிக் கொடையாளர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
18 முதல் 65 வயது வரை ஆரோக்கியத்துடன் இருப்போர் 3 மாதங்களுக்கு ஒரு முறை குருதி தானம் செய்யலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஊர்வலத்தில் பங்கேற்றோர் ஏந்திச் சென்றனர். லண்டன் பேட்டை, பெங்களூரு சாலை வழியாக சென்ற ஊர்வலம் வட்டச் சாலை அருகே நிறைவு பெற்றது.