கெலவரப்பள்ளி அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் வரும் மழை நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் ஏற்கெனவே முழுக் கொள்ளளவு நீர் உள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது.
கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். அணையின் நீர்மட்டம் 40.34 அடியாக உள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அணைக்கு விநாடிக்கு 422 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி 480 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.