போலீஸார் மிரட்டுவதாக பெண்கள் புகார்
சாமல்பட்டி காவல் நிலைய போலீஸார், தங்களை மிட்டுவதாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மனைவியர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் தனித் தனியாக செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஆதிலட்சுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் அளித்த மனுவின் விவரம்: கடந்த மார்ச் 22 - ஆம் தேதி, அம்பேத்கர் நகரில் மாரியம்மன் பண்டிகையின் போது ஏற்பட்ட தகராறில், பரசுராமன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிந்து, எனது கணவர் ஜிம் மோகனை கைது செய்து சிறையில் அடைந்தனர். இத்தகைய நிலையில், சாமல்பட்டி போலீஸார், என்னை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். இது தொடர்பாக, போலீஸாரை விசாரிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல, அதே பகுதியைச் சேர்ந்த பிருந்தா அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளது: எனது கணவர், எனது தம்பியின் மனைவி ஆஷா மற்றும் என் மீது பரசுராமன் கொலை வழக்கில் போலீஸார் பொய் வழக்குப் பதிந்துள்ளனர். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.