தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியில், கிருஷ்ணகிரி அரசு விளையாட்டு விடுதி மாணவர்கள் பதக்கங்கள் வென்று சிறப்பிடம் பெற்றனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டணத்தில் உள்ள ராஜீவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில், 35-ஆவது தேசிய அளவிலான இளையோருக்கான 4-ஆவது கேடட் தேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 26 மாநிலங்களில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கிருஷ்ணகிரி அரசு விளையாட்டு விடுதி மாணவர்கள் பூபதி, தினேஷ்குமார் ஆகிய இருவரும் பங்கேற்றனர். இதில், 33 கிலோ எடை பிரிவில் பூபதி வெள்ளிப் பதக்கமும், 41 கிலோ எடை பிரிவில் தினேஷ்குமார் வெண்கலப் பதக்கமும் பெற்று சிறப்பிடம் பெற்றனர். பதக்கங்கள் வென்ற மாணவர்கள் பூபதி, தினேஷ்குமார் மற்றும் பயிற்சியாளர் ராஜகோபால் ஆகியோரை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.சிவரஞ்சன் பாராட்டினார்.