கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.
மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம், காந்தி சாலை, பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். மேலும், கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் அவர் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினார்.
ஆட்டோக்களில் வாக்களிப்போம், ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய வில்லையை ஒட்டினார். கிருஷ்ணகிரி நகரில் வீடுவீடாகச் சென்ற அவர், ஏப். 18-இல் நடைபெறும் வாக்குப்பதிவில் கட்டாயம் பங்கேற்று வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது வாக்காளர்களின் உரிமை என வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார். மேலும், 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தேர்தல் குறித்த அனைத்து விதமான சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளலாம் என வலியுறுத்தினார்.
அப்போது, ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் இயக்குநர் உமா மகேஸ்வரி, வட்டாட்சியர்கள் மிருளாளினி, மது செழியன், நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ், சுகாதார அலுவலர் மோகன் சுந்தரம், காவல் ஆய்வாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.