தளி அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் காவல் துறையினருக்கு பயந்து தூக்கிட்டுத் தற்கொலை
செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள கொரனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் மகன் சாந்தகுமார் (25), ஒசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த 17 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பெண்ணின் உறவினர்கள் ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், தன்னை காவல் துறையினர் தேடி வருவதை அறிந்த சாந்தகுமார், காவல் துறையினருக்கு பயந்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.