கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்க்க தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய பசுமை ஆணையம் தீர்ப்பாயத்தின் ஆணை படி, வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்த மீன்களானது காற்று சுவாச மீன்களாகும். இந்த மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. மேலும், எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழக்கூடியவை. இதனால், இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்துவிட்டால் அவைகளை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று.
பாரம்பரிய மீன் இனங்களை அழிக்கும் அபாயம்: இந்த மீன்கள் மிகக் குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. இந்திய நாட்டின் பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கிக் கொள்ளும் இந்த வகை அயல்நாட்டு மீன்கள், நமது பாரம்பரிய மீன் இனங்களை அழிக்கும் அபாய நிலையை உருவாக்கும். 
இந்த அயல்நாட்டு மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ அல்லது மீன்வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால், மழைக் கால வெள்ளப் பெருக்கு காலத்தில் குளங்களில் இருந்து தப்ப வாய்ப்பு உள்ளன. அவ்வாறு தப்பும் இந்த ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள், ஏரி அல்லது ஆற்றில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் குறிப்பிட்ட காலத்துக்குள் நமது பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து விடும். இதனால், நமது பாரம்பரிய மீன்களை வளர்க்கும் மீனவர்கள் வருவாய் இல்லாத நிலை ஏற்படும். 
ஆலோசனை: மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள மீன் பண்ணையாளர்கள், அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை மீன்வளத் துறையின் ஆலோசனைகளை பெற்று வளர்க்கவும். புதிதாக மீன் பண்ணை அமைக்கும் மீன் விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை முதன்மை நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு தங்கள் மீன் பண்ணையை பதிவு செய்து, அரசு வழங்கும் மானியத்தை பெற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீறி வளர்த்தால் குற்றவியல் நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கொடூரமான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை மீன் விவசாயிகள் இருப்பு செய்து வளர்க்க வேண்டாம். 
அதையும் மீறி, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீனை வளர்ப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
எச்சரிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com