கிருஷ்ணகிரியில் கத்தியைக் காட்டி மிரட்டி தம்பதியிடம் நகை பறிந்த வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி ஆசாத் நகரைச் சேர்ந்தவர் அக்பர். இவரது மனைவி குல்நாத் (40). இருவரும் கிருஷ்ணகிரி பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே நடைபயிற்சியில் கடந்த 14-ஆம் தேதி ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி, குல்நாத் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையைப் பறித்து சென்றனர். இதுகுறித்து, குல்நாத் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை தனித்தனியே விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து, தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குண்டலப்பட்டியைச் சேர்ந்த எம்.மணி(20), டி.அசோக்(18) என்பதும், அவர்கள் இருவரும் தம்பதியிடமிருந்த தங்க நகையை மிரட்டி பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.