கிருஷ்ணகிரியில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, மருத்துவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக இருவர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி வெஸ்ட்லிங் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் வெங்கடேஸ்வரன்(44). இவர், கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்த வெல்லமண்டி ஜெயகுமார், கீதா ஆகிய இருவரும் மருத்துவரிடம் கிருஷ்ணகிரியில் நிலம் வாங்கி தருவதாகக் கூறி உள்ளனர்.
இதையடுத்து ஜெயகுமார், கீதா ஆகியோரிடம் ரூ.1.43 லட்சம், ரூ.8.23 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வெங்கடேஸ்வரன் அளித்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நாள்கள் கடந்த நிலையில், அவர்கள் இருவரும் நிலத்தை கிரயம் செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். இத்தகைய நிலையில், பணத்தை திருப்பித் தரும்படி வெங்கடேஸ்வரன் கேட்டபோது, அவர்கள் இருவரும், வெங்கடேஸ்வரனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வெங்கடேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.