பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள கலப்பம்பாடி மையத்தில் 21 பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கலப்பம்பாடி அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. சின்னபள்ளத்தூர் பள்ளித் தலைமை ஆசிரியர் மா.பழனி தலைமை தாங்கியும், ஓய்வுபெற்ற ஆசிரியர் சென்னி வீரன் முன்னிலையும் வகித்தனர். பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் என 21 பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர் கலந்துகொண்டனர்.
இதில் பெண் கல்வி, பெண்களுக்கான உரிமை, கட்டாயக் கல்வி சட்டம், ஜந்து வயது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தல், பள்ளியில் பயிலும் குழந்தைகள் இடைநிற்றலைத் தவிர்த்தல், பள்ளிக்கு சீர்வரிசை திருவிழாவை நடத்தி, பள்ளிக்குத் தேவையான பொருள்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் உறுப்பினர்களிடம் விவாதிக்கப்பட்டன.
பயிற்சியை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்கண்ணா, பயிற்சி ஆசிரியர் கோகிலா ஆகியோர் ஏற்பாடு செய்தனர். கலப்பம்பாடி பள்ளித் தலைமை ஆசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.