கிருஷ்ணகிரி மாவட்ட நூலகத்தில் சனிக்கிழமை (மே 4) இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நூலகம் சார்பில், வெள்ளிக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட நூலக நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கோடை கால முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டில் மாவட்ட நூலகம், அகர்வால் கண் மருத்துவமனை ஆகிய இணைந்து, இலவச கண் சிகிச்சை முகாமை நடத்துகிறது.
மாவட்ட நூலக வளாகத்தில் நடைபெறும் இந்த இலவச முகாமில், பொதுமக்கள் பங்கேற்று பயன் பெறலாம். மேலும், இந்த முகாமையொட்டி, மே 5 முதல் 15-ஆம் தேதி வரையில் மாணவ, மாணவியருக்கான தற்காப்புக் கலை, மேடைப் பேச்சு, மாயாஜாலம், ஆங்கிலப் பேச்சு, நகைச்சுவை பேச்சு, ஓவியம், கணிதப் புதிர், யோகா, கைவினைப் பொருள்கள் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு கலைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.