போச்சம்பள்ளி அருகே, இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை, நாகரசம்பட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டியைச் சேர்ந்தவர் கோமதி (29). இவரிடம், பாலேகுழி அருகே உள்ள குட்டூரைச் சேர்ந்த அன்பு (31), வேலன், சிவா ஆகிய மூவரும் சேர்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் பெற்றார்களாம். ஆனால், வேலை வாங்கித் தரவில்லையாம்.
இதையடுத்து, பணத்தை திருப்பித் தரும்படி கோமதி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அவர்கள் பணத்தை திருப்பித் தராமல் மிரட்டினார்களாம். இதுகுறித்து, கோமதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதரிடம் புகார் அளித்தார்.
இது குறித்து, நாகரசம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, அன்புவை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவா, வேலன் ஆகியோரை தேடி வருகின்றனர்.