கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் கட்ட சேர்க்கை கலந்தாய்வில் 120 மாணவியர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019 - 2020 -ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப் பிரிவுகளில் மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வுக்கு தமிழ்த்துறைத் தலைவர் சௌ.கீதா முன்னிலை வகித்தார். சிறப்பு ஒதுக்கீடான விளையாட்டு வீராங்கனைகள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அனைத்து இளங்கலை பட்ட படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 120 மாணவியர் பங்கேற்றனர். மேலும், பி.காம், பி.காம் (சிஎஸ்) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மே 28-ஆம் தேதியும், பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், வேதியல், உயிர் வேதியல், புள்ளியியல், இயற்பியல் ஆகிய பிரிவுகளுக்கு மே 29-ஆம் தேதியும், பி.ஏ. தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மே 30-ஆம் தேதியும் கலந்தாய்வு நடக்கவுள்ளது.