கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருவார கால தீவிர வயிற்றுப் போக்கு கட்டுப்படுத்தும் முகாம் மே 28 - ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மலர்விழி வள்ளல், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட 1,53,676 குழந்தைகள் உள்ளனர். சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் இந்தக் குழந்தைகளுக்கான தீவிர வயிற்றுப் போக்கு கட்டுப்படுத்தும் முகாமை நடத்துகிறது. இருவார காலம் நடைபெறும் இந்த முகாமானது மே 28 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தலா ஒரு உப்புக்கரைசல் பாக்கெட் வழங்கப்படும். மேலும், கை கழுவும் முறை, உப்புக்கரைசல் தயாரிக்கும் முறை, வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் அதன் சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்படும். இரண்டாம் வாரத்தில் வயிற்றுப்போக்கு இருக்கும் குழந்தைகளைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக அனைத்து துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் உப்புக் கரைசல் வைக்கப்படும். இந்தப் பணியில் 2,436 பணியாளர்கள் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.