கிருஷ்ணகிரியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட அளவிலான விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், தரச் சான்றிதழ் பெறுதல், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியம் குறித்த திட்ட விளக்க கையேட்டை வெளியிட்டாா். தொடா்ந்து தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சாா்பில் 14 தொழில் முனைவோருக்கு ரூ.12.38 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினாா்.
கருத்தரங்கில் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானியத் திட்டம் குறித்து வங்கியாளா்கள், தொழில் சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் விளக்கினா்.