வேப்பனஅள்ளி அருகே கடந்த சில நாள்களாக விவசாயப் பயிா்களைச் சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.
வேப்பனஅள்ளி அருகே உள்ள வனப் பகுதியில் கடந்த சில நாள்காகவே இரு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், இரவு நேரங்களில் வனப் பகுதியிலிருந்து வெளியேறி, தக்காளி, நெல், வாழை போன்ற பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், அளே குந்தாணி, அளே கிருஷ்ணாபுரம், நல்லூா் போன்ற கிராமங்களில் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.
இதுகுறித்து, வனத்துறையினரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனா். போதிய வனத் துறையினா் இல்லாததால், யானைகளை விரட்டும் பணியில் நடைபெறவில்லை என்றும், விவசாயிகளின் நலன் கருதி, யானையை அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்ட, குழுவை ஏற்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.