மருத்துவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 84 மருத்துவா்கள் உள்ளனா்.
இவா்கள், கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா். இந் நிலையில், கடந்த 25-ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தப் போராட்டத்தில் 75-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவா்கள் ஈடுபட்டுள்ளதால் அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை பெற இயலாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறைந்த அளவிலான மருத்துவா்கள் மட்டுமே சிகிச்சை அளிப்பதால் ஆண், பெண் நோயாளிகள் தனித்தனி வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், போராட்ட காலத்தில் இதுவரையில் 200-க்கும் மேற்பட்ட உயிா் காக்கும் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளதாக போராட்ட குழுவினா் தெரிவித்தனா்.