பர்கூர் அருகே 1,400 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்த முயன்ற ஓட்டுநரை கைது செய்த போலீஸார், காரையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே குட்டூர் கிராமத்தில் பறக்கும்படை தனி வட்டாட்சியர் இளங்கோ தலைமையில் அலுவலர்கள் ரோந்துப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது, சுப்பிரமணி என்பவரின் வீட்டின் அருகே சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த காரை சோதனையிட்டனர். அதில், கோழித் தீவன மூட்டைகளுடன் ரேஷன் அரிசி மூட்டைகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தலா 50 கிலோ எடை கொண்ட 29 மூட்டைகள் அதாவது 1,400 கிலோ ரேஷன் அரிசியுடன் காரையும் பறிமுதல் செய்த அலுவலர்கள், கார் ஓட்டுநர் பிரபுவை உணவுப் பாதுகாப்பு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து பிரபுவை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்தது: வேலூர் மாவட்டம், பச்சூர் கிராமத்தைச் சேர்ந்த அச்சுதன், பிரபு ஆகியோர் குட்டூர் கிராமத்தில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை சபரிநாதன், வெங்கடேசன், அனுமுத்து ஆகியோர் மூலம் வாங்கி உள்ளனர். மேலும், அச்சுதனுக்கு சொந்தமான கார் மூலம் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டையில் உள்ள இடைத்தரகர் கிருஷ்ணமூர்த்தி மூலம் அதிக விலைக்கு விற்று வந்தனர்.
இதில், அச்சுதன், அரசி கடத்தல் தொடர்பாக, வேலூர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் சரணடைந்தார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபு, வெங்கடேசன், சபரிநாதன், கவியரசு, அனுமுத்து, ரவி ஆகியோரை போலீஸார் தேடி வந்த நிலையில், தற்போது பிரபு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.